இந்தியா

இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளது : பாடகி எஸ்.ஜானகிக்கு ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லி,

இந்திய சினிமாவில் பழம்பெரும் பாடகியாக திகழ்ந்தவர் எஸ்.ஜானகி. ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, இந்திய சினிமா முழுமைக்கும் அறியப்பட்ட பாடகி ஆவார். சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ்.ஜானகி, வயது மூப்பு காரணமாக நேற்று மைசூருவில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில், இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார்.

காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாக திகழும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button