ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் குப்பை எரிக்கும் போராட்டம் : மீனாட்சி நகர் பகுதியில் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கி அழைப்பு

ராமநாதபுரம், ஜூலை.09:-
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மஞசன மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறலுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தொகுதியின் இந்த அவலநிலை தொடர்வதை கண்டித்தும், பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தாத மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் குப்பை எரிக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர்.



இந்நிலையில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் குப்பை எரிக்கும் போராட்டத்திற்கு மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் தலைமையில், மாவட்ட தலைவர் திருப்பாலை முனியசாமி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலா ஆகியோர் முன்னிலையில்,பா.ம.க நிர்வாகிகள் மீனாட்சி நகர் பகுதியில் வீடு,வீடாகச் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சை.அக்கீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பஜருல் அலி,திருவாடானை தொகுதி செயலாளர் காதர்ஷா, உள்ளிட்ட பா.ம.க நிர்வாகிகள் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று முகக்கவசம் வழங்கி போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி அழைப்பு விடுத்தனர்.பாட்டாளி மக்கள் கட்சியினரின் இந்த முயற்சியை பாராட்டிய அப்பகுதி மக்கள் கட்டாயம் போராட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்தனர்.




