தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி, ஓ.என்.ஜி.சி. சார்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம்,ஜூலை.10:-

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சுவார்ட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் நடைபெற்ற “தூய்மை இந்தியா” விழிப்புணர்வு நடைப்பயணப் பேரணியை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தூய்மை இந்தியா இருவார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நோக்கம் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இந்த இருவார விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு உதவிகள் வழங்குதல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வர்ணம் பூசுதல், மரக்கன்றுகள் நடுதல், தானியங்கள் வழங்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, தூய்மை இந்தியா இயக்கத்தின் நோக்கங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், நெகிழி ஒழிப்பு, தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் வகையிலும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

இப்பேரணி ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் தூய்மை இந்தியா, நெகிழி ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான வாழ்விடத்தை உருவாக்குவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, தூய்மையான மற்றும் பசுமையான சமூகத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி நடைபெற்ற இவ்விழிப்புணர்வு பேரணி, பொதுமக்களிடையே தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போர்ட் மேலாளர் பிராசென்ஜித் கோகய், முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) கிரிராஜ் திமின் , மாவட்ட விளையாட்டு அலுவலர் மூ.தினேஷ் குமார் , தொலைத்தொடர்பு பிரிவு அலுவலர் அறிவழகன், ஓ.என்.ஜி.சி. நிறுவன அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button