தமிழ்நாடு

அண்ணாமலையின் ஆரோக்கியமான கருத்துகளை ஏற்கிறோம் : அமைச்சர் விக்னேஷ்

பழனி அருகே உள்ள கோரிக்கடவு கிராமத்தில் த.வெ.க. சார்பில் கூட்டம் நடந்தது. இதில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார்.

பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வியட்நாம் விபத்தில் பலியான பழனியை சேர்ந்த முருகபிரபுவின் உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக செய்திகள் வந்தன. எனவே இன்று கூட (அதாவது நேற்று) அறநிலையத்துறை அமைச்சரிடம் செல்போனில் பேசினேன்.

அப்போது, கோவில் நில மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து, அந்த நிலங்கள் மீட்கப்படும் என அவர் கூறியுள்ளார். தவறு யார் செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்படும். தமிழகத்தில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு நிதிச்சுமை இருந்தது. தற்போது அதை நிவர்த்தி செய்து வருகிறோம். எனவே அடுத்தகட்டமாக மக்களுக்கு பாதிப்புள்ள டாஸ்மாக் கடைகளை மூட முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்து செயல்பட்டு வந்த பார்கள் தான் மூடப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான கருத்து
திண்டுக்கல் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதற்காக கலெக்டர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்பு, “அண்ணாமலை நடத்தும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்புக்கு அதிகமாக இளைஞர்கள் செல்கிறார்கள், எனவே அவரின் மாநாடு குறித்து தங்களின் கருத்து என்ன?” என அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ” இது ஜனநாயக நாடு. கரூரில் கோவில் நிலம் வழங்கப்பட உள்ள விவகாரத்தில் கூட அண்ணாமலை தமிழக அரசை பாராட்டியுள்ளார். அண்ணாமலையின் ஆரோக்கியமான கருத்துகளை ஏற்கிறோம். யாரையும் எதிரியாக பார்க்கவில்லை, தீயசக்தியை தவிர” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button